பத்மநாபா ஏகாதசி தோன்றிய கதை

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புரட்டாசி மாத பத்மநாபா ஏகாதசி பற்றிய பதிவுகள் :

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி பாபாங்குச ஏகாதசி அல்லது பத்மநாபா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

பத்மநாபா ஏகாதசி தோன்றிய கதை: 

முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர் மாந்தாதா தர்மம் தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் குறையில்லா வாழ்வு வாழ்ந்தார்கள். அரசரும் முறை தவறாத ஆட்சி மேற்கொண்டார். 
 
இருந்தாலும் ஒரு முறை அவரது நாட்டில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழையே பெய்யவில்லை. வறட்சியும், பஞ்சமும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து இருந்து குடிமக்களை வாட்டி வதைத்தன. மக்கள் வழி தெரியாது மன்னனிடம் முறையிட்டனர். மன்னனும் காரணம் அறியாது கலங்கினார். 

அவருக்கு தெரிந்த வரை அவர் ஒரு தவறும் இழைக்கவில்லை. தனது சேனைகளையும், பரிவாரங்களையும் கூட்டிக் கொண்டு காடு காடாக சென்று சாதுக்களை தரிசித்தார். எங்காவது ஒரு வழி கிடைக்குமா எனத் தேடினார்.
 
பஞ்சத்தால் மக்கள் படும் துயர் தாங்காத மன்னர் ஆங்கீரச முனிவரைத் தரிசித்து துயரம் நீங்க வழி கேட்டார். அவரிடம் தனது கஷ்டத்தை அவர் எடுத்து கூறிய போது, முனிவர் தனது தவ வலிமையால் கண்டறிந்து மன்னனின் ராஜ்ஜியத்தில் பிராமணன் இல்லாத ஒருவன் வேள்வி யாகங்களில் ஈடுபட்டதன் பலனே இது என உரைத்தார்.  

அவனை கொன்றுவிடும்படி மன்னனிடம் கூறினார். கொல்லும் அளவுக்கு இது பெரிய குற்றமில்லை என்பதால் மன்னன் அதனை மறுத்து வேறு உபாயம் கேட்டார். முனிவரும் பத்மநாபா ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னார். பிரச்சனை தீரும் என்றார். 

நாடு திரும்பிய மன்னன் தன் பிரஜைகளையும் பத்மநாபா ஏகாதசி விரதம் இருக்க சொன்னார். விளைவாக நாட்டில் வறட்சியும், பஞ்சமும் நீங்கியது. சுபிட்சம் ஏற்பட்டது. இந்த பத்மநாபா ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். 

தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது.
 
ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும், சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top