நவராத்திரி ஏழாம் நாள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி ஏழாம் நாள் பற்றிய பதிவுகள் :

நவராத்திரியின் இறுதி பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி நான்கு அல்லது ஐந்து நாட்கள் விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவதால் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வழிபட்ட பலனை தரும். 

நவராத்திரியின் 7ம் நாளை மகாசப்தமி என குறிப்பிடுவதுண்டு. இந்த நாளில் தான் அசுரர்களை வதம் செய்வதற்காக அம்பிகை, உக்கிரமாக காளி வடிவம் எடுத்து புறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அசுரர்களுடனான போர் உச்ச கட்டத்தில் இருந்து, மிக கொடிய அசுரர்களை அம்பிகை வதம் செய்ததும் இந்த ஏழாவது நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன.

இந்த ஆண்டு நவராத்திரியின் 7ம் நாளான மகா சப்தமி அக்டோபர் 10ம் தேதி புதன்கிழமை வருகிறது. இது சரஸ்வதி தேவியை வழிபட துவங்குவதன் முதல் நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரியின் 7ம் நாள், மூலம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது இன்னும் சிறப்பானதாகும். 

மூலம் நட்சத்திரம் என்பது கலைமகளாகிய சரஸ்வதி தேவி அவதரித்த நட்சத்திரம் ஆகும். அவள் அவதரித்த நட்சத்திரத்திலேயே அவளுக்கு வழிபாட்டின் ஆரம்ப நாள் வருவது இன்னும் விசேஷமானதாகும். இது கலைமகளின் அருளை முழுமையாக பெறுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் என்பது கலைமகளை வழிபடுவதற்குரிய நாட்களாகும். ஞானம், கல்வி, கலைகள், பேச்சு ஆகியவற்றில் அதிக ஆற்றலை பெற்று, தேர்ச்சி பெறுவதற்கு கலைமகளின் அருள் நிச்சயம் தேவை. 

ஒருவர் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், சவால்கள் ஆகியவற்றை சமாளித்து, தொடர் வெற்றிகள், முன்னேற்றம் ஆகியவற்றை பெற வேண்டும் என்றால் அதற்கு சரஸ்வதி தேவியின் அருள் நிச்சயம் தேவை. அப்படி நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை விலக செய்யும் நாட்கள் என்பதால் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அம்பிகையின் வடிவம் - சாம்பவி
கோலம் - சங்கு வடிவ கோலம் (மலர்களால் கோலம்)
மலர் - தாழம்பூ
இலை - தும்பை
நைவேத்தியம் - எலுமிச்சை சாதம்
சுண்டல் - கொண்டைக்கடலை சுண்டல்
பழம் - பேரீச்சம் பழம்
நிறம் - இளம் சிவப்பு
ராகம் - பிலஹரி

நவதுர்க்கை வழிபாடு 7ம் நாள் :

அம்பிகையின் வடிவம் - காலராத்திரி தேவி
நைவேத்தியம் - வெல்லம் கலந்த இனிப்பு உணவுகள், பால்
மலர் - பாரிஜாதம்
நிறம் - சிவப்பு
பலன் - தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காப்பவள். 

பாவங்கள், தடைகள், ஆபத்துக்களை நீக்கி, பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தருபவள். பக்தர்களை கவசம் போல் இருந்து காப்பவள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top