இன்று புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி அம்மன் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்த்தப்பட்ட நாள்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த அமாவாசையை பௌர்ணமியாக்கிய அபிராமி அம்மன் குறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
இங்கு தை அமாவாசை தினத்தன்று ஸ்ரீஅமிராமி அம்மனின் பக்தரான அபிராமிபட்டர் வழிபட அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டார். அபிராமி பட்டர் அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த நிலையில், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார்.
இன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார். இதனையடுத்து அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார். 100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79வது பாடலான
“விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு
வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு
எமக்கு அவ்வழி கிடக்க பழிக்கே சுழன்று,
வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே? "
என்ற பாடலை பாடினார். அப்பொது அம்மன் நேரில் தோன்றி தனது காதிலிருந்து தோட்டை எடுத்து வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக கோயில் வரலாறு கூறுகின்றது.
அதன்படி தை அமாவாசையான இன்று அபிராமி பட்டரின் உயிரை காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய நிகழ்வு நடத்தப்படும். இரவு மஹா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருள்வார்.
விழாவை முன்னிட்டு முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். விழாவின் நிறைவாக அபிராமி பட்டர் உடன் ஸ்ரீ அபிராமி அம்மன் திருவீதியுலா நடைபெறும். பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்துவார்கள்.