விரதங்களில் சில விரதங்கள் கடுமையான விதிமுறைகளை கொண்டவை. அவற்றில் ஒன்று ஏகாதசி விரதம். பொதுவாக விரதங்கள் சூரிய உதயத்தின் போது துவங்கி, மாலையில் நிறைவு செய்வார்கள்.
ஆனால் ஏகாதசி விரதத்தை, ஏகாதசி திதி துவங்கும் போது விரதத்தை துவங்கி, துவாதசி திதியில் பாரனை செய்யும் நேரத்தின் போது நிறைவு செய்ய வேண்டும். அதோடு கடுமையான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
ஏகாதசி விரதம் :
ஏகாதசி என்பது மிக முக்கியமான விரத நாளாகும். குறிப்பாக வைணவர்களுக்கு இது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாளாகும்.
ஏகாதசி அன்று விரதம் இருந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், கஷ்டங்கள் விலகும், செல்வ வளம் பெருகும், வைகுண்ட பதவி கிடைக்கும்.
ஆனால் ஏகாதசி விரதம் இருப்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மிக கடுமையான விரத விதிகளை பின்பற்ற வேண்டும்.
சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விரத விதிகளை முறையாக பயன்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் மட்டுமே அதன் முழு பலனையும் பெற முடியும்.
ஏகாதசி விரத பலன்கள் :
ஏகாதசி, மிகவும் புனிதமான நாள் என்பதால் பக்தர்கள் இந்த நாளில் பெருமாளை நினைத்து விரதம் இருக்கிறார்கள். இந்த அற்புதமான நாளில் விரதம் இருந்து, முழு பக்தியுடன் பெருமாளை வழிபட்டால் நம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் பெருமாள் நிறைவேற்றி வைப்பார்.
அதோடு வாழ்வில் மகிழ்ச்சி, செல்வ வளம் என அனைத்து நலன்களும் கிடைத்து நிறைவான வாழ்க்கையை வாழ செய்வார். அளவில்லாத நல்ல பலன்களை தருவதால் ஏகாதசி விரதம் இருக்க அனைவரும் விரும்பலாம்.
ஆனால் ஏகாதசி விரதத்தை எப்படி இருக்க வேண்டும், எவற்றை எல்லாம் இந்த நாளில் கண்டிப்பாக செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொண்டு அந்த முறையில் விரதத்தை கடைபிடித்தால் முழு பலனையும் பெற முடியும்.
ஏகாதசி விரத விதிகள் :
அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். ஆனால் சோப் உள்ளிட்ட வாசனை பொருட்கள் அல்லது உடலை சுத்தம் செய்வதற்கான பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
ஏகாதசி அன்று இலைகளை பறிக்கக் கூடாது. குறிப்பாக இந்த நாளில் துளசி இலைகளை செடிகளில் இருந்து பறிக்கக் கூடாது.
கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை :
உடல் தூய்மையுடன், தூய்மையான மனதுடன் விரதம் இருப்பதாக உறுதி எடுத்துக் கொண்டு, முழுமையான பிரம்மச்சரியத்தை கடைபிடித்து விரதம் இருக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் இருக்கும் நாளில் அரிசி மற்றும் தானிய உணவுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அனைவரிடமும் சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் மீது கோபப்படுவதோ, மற்றவர்களுக்கு சாபம் வழங்குவதோ கூடாது.
மற்றவர்களை துன்புறுத்தும், அவர்களின் மனம் வருத்தப்படும்படியான எதையும் சொல்லவோ, செய்யவோக் கூடாது.
மஹாமந்திரத்தை தொடர்ந்து மனதிற்குள்ளாகவோ அல்லது வாய் விட்டோ உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
ஏகாதசி அன்று முடி வெட்டுவது, நகங்களை வெட்டுவது, தாடி அல்லது மீசையை திருத்துவது போன்றவற்றை செய்யக் கூடாது.
இந்த நாளில் உபவாசமாக விரதம் இருப்பது சிறப்பானது. முடியாதவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் முதலில் அதை பெருமாளுக்கு படைத்து விட்டு, அதற்கு பிறகு பிரசாதமாக மட்டுமே அந்த உணவை சாப்பிட வேண்டும்.
ஏழை மக்களுக்கு கண்டிப்பாக தானம் வழங்க வேண்டும்.