ஜாதகத்தில் குறிப்பிடப்படும் மறைவு ஸ்தானம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஜாதகத்தில் குறிப்பிடப்படும் மறைவு ஸ்தானம் பற்றிய பதிவுகள் :

பொதுவாக ஒரு ஜாதக அமைப்பில் மறைவு ஸ்தானம் என்பது ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகம் ஆகும். மறைவு ஸ்தானங்களின் திசா மற்றும் புத்தி நடக்கும் போது கெடுதல் மட்டுமே நிகழும் என்பது பாரம்பரிய ஜோதிட முறையில் சொல்லப்படும் ஒரு கூற்றாகும்.

உண்மையில் மறைவு ஸ்தானம் என குறிப்பிடப்படும் ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகத்திற்கும், லக்னம் முதல் 12 பாவகத்திற்கும் இரண்டு விதமான குணங்கள் உள்ளன : அவை 

1. சுபர்களின் சேர்க்கை மற்றும் பார்வை

2. அதிபதிகள் பெறும் பலம் 

சுய ஜாதகத்தில் மேற்கண்ட மறைவு ஸ்தானங்கள் மற்றும் மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதிகளின் திசைகள் நல்ல பாவகங்களுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தினால் நன்மையை தரும்.

மறைவு ஸ்தானங்கள் திசையில் ஒரு மனிதன் முழுமை அடைகிறான். அவர்களின் வாழ்க்கையில் உள்ள துன்ப காலங்களில் மனதில் உண்டாகும் தைரியம், போராடும் குணம் மற்றும் தனக்கு ஆதரவானவர்களை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். 

வாழ்க்கையில் ஏட்டுக்கல்வியை விட அனுபவ கல்வியே சிறந்தது. ஆனால், அதற்கு நாம் அளிக்கும் விலையோ சற்று அதிகமானது. 

ஆனாலும், மறைவு ஸ்தானங்கள் திசையில் தீமையே நடக்கும் என்று கூறவும் இயலாது. எல்லாம் நாம் செய்த வினைகளின் அடிப்படையை பொறுத்தே உள்ளது. மறைவு ஸ்தானங்களின் திசைகளில் நன்மைகளும் உண்டாகும். அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, மறைவு ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்து, இதன் அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி பார்ப்போம்.

ஆறாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

திசை முழுவதும் சிறு சிறு அதிர்ஷ்டங்களை ஜாதகர் பெற்றுக்கொண்டே இருப்பார்.

உடலில் ஏற்படும் உடல்நல குறைவுகள் விரைவில் குணமாகும்.

கடன் பெறுவதாலும், கொடுப்பதாலும் ஜாதகர் நன்மை பெறுவார். எதிரிகளின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும்.

எதிரிகள் கூட நண்பர்கள் ஆகும் சூழ்நிலை உண்டாகும், எதிரிகளின் செயல்பாடுகள் ஜாதகருக்கு சாதகமாக மாறிவிடும், ஜாதகரை எதிர்ப்பவர்கள் தோல்வியை தழுவ வேண்டி வரும், தொழிலில் முன்னேற்றம் என்பது மிக விரைவானதாக இருக்கும்.

ஜாதகரின் வளர்ச்சி என்பது எவராலும் அறிந்து கொள்ள இயலாத அளவில் இருக்கும்.

தனது தாய்மாமன் வழியில் இருந்து அதிக நன்மை பெரும் யோகம் உண்டாகும்.

எட்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகருக்கு குபேர சம்பத்து உண்டாகும். லாட்டரி, புதையல் போன்ற அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் பெறுவார்.

குறிப்பாக ஆயுள் காப்பீடு மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் ஜாதகர் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு வருமான வாய்ப்புகளை பெறுவார்.

மேலும் திடீர் பொருள் வரவும், சொத்து சேர்க்கையும், எதிர்பாராத பண வரவும் நிச்சயம் ஏற்படும்.

பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

ஜாதகர் செய்த சிறு முதலீடு மூலம் மிகப்பெரிய வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும். 

தொழில், நிலம், நகை மற்றும் வாகனம் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதால் எதிர்பாராத செல்வாக்கு மற்றும் பண வரவு கிடைக்கும்.

ஆன்மீக வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி, இறை நிலை பற்றிய தெளிவு, தன்னை பற்றி தெரிந்து கொள்ளும் ஆற்றல், மற்றவர்களின் மன நிலையை தெளிவாக தெரிந்து கொள்ளும் சிறப்பு தகுதிகள், மன தத்துவ நிபுணர் ஆகும் யோகம்.

ஜாதகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மன எண்ண ஆற்றல் மூலம் உலகில் நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் ஆற்றல், முன்ஜென்ம நினைவுகள், கர்ம வினை பதிவின் தன்மைகள் போன்றவைகளை பெற்றிருப்பார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top