தை அமாவாசை முதல் (சியாமளா) இராஜமாதங்கி நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.
முக்கியமாக ச்யாமளாவின் அம்சமாகத் திகழும் மதுரை மீனாக்ஷிக்கு சியாமளா நவராத்திரி விஷேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலலிதா மஹா திரிபுரசுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவம்.
இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது.
எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகையிடம் லயிக்கச் செய்ய முடியும்.
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள்.
அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.
உலகில் நம் விவகாரங்களுக்கு முக்கியமானது பேச்சு. இதையே சப்தம், வாக்கு என்பார்கள். இவ்வாக்கிற்கு ஆதாரமான சக்திகளில் மாதங்கிதேவி முக்கியமானவள்.
மந்திரியின் தயவினால் ராஜாவின் மகிழ்ச்சிக்குப் பாத்திரமாவது போல் மாதங்கியை நாடியவர்கள் ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீமத் லலிதா மகா திரிபுரையாள் அருளை அடைவது திண்ணம்.